அது!
எனது!
நான், பல நாள், தூக்கமிழந்தது!
"அது", எது?
என் தூக்கமெல்லாம்
இரவின் தூக்கத்துக்கு பின்னர் தான்!
மூடிய விழிகள் - முடிந்திடா எண்ணங்கள்;
அதிலும் பல வண்ணங்கள்!
கனவா?
வெறியா?
அல்ல - வெறும் எண்ணச் சுருள்களா?
என்றெண்ணி எண்ணியே -
எண்ணிக்கொண்டிருந்தேன் - கொட்டிய முடிகளை!
மும்முறை தீனியும்
பெயர் சொல்ல ஒரு பணியும்
இருக்கிறது - நிறைவா!
அது தான், என் நிறைவா?
ஆசை, பேராசை - அது நிராசை!
என்னுடையது - ஆசையில் அடங்குவதல்ல;
தூரத்து கடல்!
குளிர் மணல்!
வானத்து வட்ட ஒளி!
மெல்லிசை காற்று!
இவற்றால் ஆனதல்ல - என் அது!
அது, "எது"?
அது,
கடலலையைப் போல் - ஆர்ப்பரிக்கும் இரைச்சல்!
மனதெல்லாம் ஒரே குமைச்சல்!
எங்கேயும் நகலாமல்
எண்ணத்தினுடே எங்கெங்கோ அலைச்சல்!
நிறைந்திடாத என் நிறைவை
தூக்கி எறிந்தேன் -
அதுவழி வந்திட்ட இழிவால்
தனலாய் எரிந்தேன்!
முற்றும் -
எரிந்ததாலோ
என்னவோ?
வசையெல்லாம் - இசை ஆயின!
காசின்றி வாங்கிய
கல்லடியிலும்
சங்கதி சத்தமே கேட்டது!
என், "எது" - இதுவாயிருக்குமோ??
இசையாய் இருக்குமோ?
இரைச்சல் இசையாய், இனிக்குமோ?
ஆர்ப்பரித்த கடல் -
அமைதி கொள்ள ஆரம்பித்தது -
இரைச்சல் இசையால்!